திருப்பூரில் சொத்து பிரச்னையை பேசி தீர்க்க உறவினரை ஓட்டலுக்கு வரவழைத்து கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவத்தில் தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் அமரன், திருப்பூர் பங்களா ஸ்டாப் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். தொடர்ந்து, பல்லடம் பகுதியில் பனியன் துணி வியாபாரம் செய்து வரும் தனது உறவினர் செந்தில்நாதனை பேச்சுவார்த்தைக்காக தனது அறைக்கு அவர் வரவழைத்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த அமரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில்நாதனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொழிலதிபர் அமரனை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இருவருக்கிடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்ததும், அதனை பேசி தீர்க்க வரவழைத்து கொலை செய்ததும் தெரியவந்தது.
















