நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யானை ரிவால்டோ, சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்தது.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த “ரிவால்டோ” என்ற யானையின் தும்பிக்கையில் கடந்த ஆண்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து கால்நடைத் துறையினர் அதற்கு உரிய சிகிச்சை அளித்து, அதன் நடமாட்டத்தை கண்காணித்தனர்.
அண்மையில் யானைக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனிடையே மசினக்குடியில் உள்ள வாழைத் தோட்டத்தில் யானை ரிவால்டோ உயிரிழந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் யானை உயிரிழந்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
















