புதுச்சேரியில் 2ஆம் கட்டமாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படாததால் இழுபறி நீடித்து வருகிறது.
புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன், மாநில அமைப்பாளர் சிவா, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், புதுச்சேரியில் காங்கிரஸ் 21 இடங்களிலும், திமுக 9 இடங்களில் போட்டியிட வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
ஆனால், இருதரப்பும் தலா 15 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என திமுக தரப்பு தெரிவித்ததாக குறிப்பிட்டார். மேலும், காங்கிரசுக்கு அதிக இடங்களை ஒதுக்குவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
















