தஞ்சாவூர் அருகே, தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செங்கிப்பட்டி அருகே தவெக தலைவர் விஜய்யின், நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது.
இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த விஜய், பின்னர் அங்கிருந்து கூட்டம் நடைபெற்ற செங்கிப்பட்டிக்கு காரில் பயணித்தார்.
விஜய்யின் வாகனத்தை அவரது ரசிகர்கள் பலரும் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றனர்.
அப்போது, வளம்பக்குடி அருகே நின்று கொண்டிருந்த காவல்துறை வாகனம் மீது இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விக்னேஷ், அவரது நண்பர் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
விக்னேஷ் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
















