திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவத்தின் மூன்றாம் நாள் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. அண்ணாமலையார் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.
அண்ணாமலையாருக்கு பச்சை பட்டு அலங்காரமும், உண்ணாமுலை அம்மனுக்கு சிவப்பு பட்டு அலங்காரமும் செய்து வண்ண வண்ண மலர் மாலைகள் சாற்றப்பட்டன. இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது.
சித்திரை வசந்த உற்சவத்தை முன்னிட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் மகிழ மரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
















