தேசிய அளவில் எழுந்த தேர்வுத்தாள் கசிவு விவகாரம், இப்போது பஞ்சாப் அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அம்மாநில கல்வி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பஞ்சாப்பில் அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்…
நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகிய நிலையில், பஞ்சாப்பிலும் நடைபெற்றதாக கூறப்படும் தேர்வுத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.
குறிப்பாக, பஞ்சாப் கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் ஆகியோர் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தேர்வு என்பது லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்வாக விளங்குகிறது. பல ஆண்டுகள் படித்து, தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேர்வுத்தாள் கசிவு போன்ற விவகாரங்கள் மிகப்பெரிய நம்பிக்கை இழப்பை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
கடந்த சில மாதங்களாக பஞ்சாப்பில் அரசு வேலைவாய்ப்பு தேர்வுகள், ஆட்சேர்ப்புத் தேர்வுகள் மற்றும் கல்வித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக மருந்தாளுநர் ஆட்சேர்ப்பு தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் அம்மாநில ஆம் ஆத்மி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மத்திய அமைச்சருக்கு ஒரு நீதி என்றால், மாநில அமைச்சர்களுக்கும் அதே நீதி பொருந்த வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் வாதம். பஞ்சாபில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொறுப்பை ஏற்காமல் அமைச்சர்கள் பதவியில் தொடர முடியாது என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, தர்மேந்திர பிரதானின் ராஜினாமா, ஜனநாயகத்தில் பொறுப்புணர்வின் வெளிப்பாடு என்று பஞ்சாப் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா கூறியுள்ளார். அதே அளவிலான பொறுப்பு உணர்வை, முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசும் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். சிரோமணி அகாலி தளமும், தேர்வுத்தாள் கசிவால் மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தற்போது வெறும் தேர்வு முறைகேடு குறித்த சர்ச்சையாக மட்டுமல்லாமல், ஆட்சியில் இருப்பவர்கள் எவ்வளவு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற அரசியல் விவாதமாகவும் மாறியுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஏற்கவில்லை. முறைகேடுகள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அரசை அரசியல் ரீதியாக தாக்கவே எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைப் பகடைக்காயாக பயன்படுத்துவதாகவும் ஆளும் தரப்பு விளக்கம் அளித்து வருகிறது.
மாணவர்களின் நம்பிக்கையை காப்பது அரசின் முக்கிய பொறுப்பு என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தேர்வு நடைமுறைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒரு மத்திய அமைச்சரின் ராஜினாமா மாநில அரசியலிலும் பதவி விலகல் கோரிக்கையை எழுப்பியுள்ளது. தேர்வுத்தாள் கசிவு விவகாரம் இனி நிர்வாகச் சிக்கல் மட்டுமல்ல, அரசியல் ரீதியில் பொறுப்பை நிர்ணயிக்கும் விவாதமாகவும் மாறியுள்ளது.
தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைப் போலவே, பஞ்சாப்பிலும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டிய சூழல் உருவாகுமா? அல்லது இந்த அரசியல் சூழலை பகவந்த் மான் தலைமையிலான ஆத் ஆத்மி அரசு சமாளிக்குமா? என்ற கேள்வி தேசிய அளவில் ஓங்கி ஒலிக்கிறது…
















