தமிழகத்தின் முக்கிய கோயில்களில் அமல்படுத்தப்பட்ட செல்போன் தடை விவகாரத்தில், ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை பின்பற்றப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கோயில்களின் பாதுகாப்பு மற்றும் ஆன்மிக அமைதியை கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக 52 முக்கிய கோயில்களில் செப்டம்பர் 1 முதல் செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்காக பக்தர்களிடம் 5 ரூபாய் கட்டணம் வசூலித்து, மொபைல் வைப்பகங்கள் அமைக்கப்பட்டன.
ஆனால், போனை ஒப்படைக்கவும், மீண்டும் பெறவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து, மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
மேலும், செல்போனை கட்டாயமாக வைப்பகத்தில் ஒப்படைக்கச் சொல்லக்கூடாது என்றும், தாமாக முன்வந்து ஒப்படைப்பவர்களிடம் மட்டுமே பெற வேண்டும் எனவும் கோயில் செயல் அலுவலர்களுக்கு வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி மற்றும் திருவண்ணாமலை கோயில்களில் வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதால், திட்டத்தை தொடர்வதா, கைவிடுவதா என்பதில் அறநிலையத்துறை அதிகாரிகளிடையே குழப்பம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
















