ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டுள்ள இரட்டைப் பொருளாதார மற்றும் ராணுவ உத்தியின் ஒரு பகுதியாக, ஈரானின் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தாக்கியளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் ஹார்முஸ் ஜலசந்தியைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவும் ஈரானும் சண்டையிட்டு வருகின்றன.
ஈரான் போரால் சர்வதேச அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு சுமார் 100 டாலரைத் தொட்டுள்ள நிலையில், வரும் நவம்பரில் நடக்க உள்ள இடைக்கால தேர்தல் ட்ரம்புக்கும் குடியரசு கட்சிக்கும் பெரும் சவாலாக உள்ளன.
இந்நிலையில், ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்கப் படைகள்,எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நாட்டின் பொருளாதாரம் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அதே நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஓமன் கடல் பாதை வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்க ராணுவம் உதவி வருகிறது.
போருக்கு முன்பு சர்வதேச கடல் பகுதியாகக் கருதப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் வணிக கப்பல்கள் தாங்கள் சொல்லும் பாதையையே பயன்படுத்த வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி வருகிறது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லத் திட்டமிடும் கப்பல்களுக்காக, அந்த ஜலசந்திக்கு அருகே ஒரு புதிய “தடை செய்யப்பட்ட மண்டலத்தை” அறிவிக்கப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது.
முன்னதாக அமெரிக்க போர்க்கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானின் ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவு மற்றும் ஜாஸ்க் (Jask) துறைமுகத்திற்கு அருகே மூன்று ஈரான் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தாக்கியதாகவும் கப்பல் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் ஈரானின் அரசுத் தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அல் அஸ்ராக் (Al Azraq) விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானால் ஏவப்பட்ட 20 ஏவுகணைகளில் 18-யை இடைமறித்து அழித்ததாகவும், மீதமுள்ள இரண்டு ஏவுகணைகள் திறந்தவெளிகளில் விழுந்ததாகவும் ஜோர்டான் அரசு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகே உள்ள எண்ணெய்க் கப்பல்களில் இருக்கும் பணியாளர்கள் உடனடியாகத் தங்கள் கப்பல்களை விட்டு வெளியேற வேண்டும் என்று ஈரானின் புரட்சிகரக் காவல் படையினர் எச்சரித்துள்ளனர்.
ஹோர்முஸ் ஜலசந்தியின் வாயிலில் அமெரிக்காவின் ஆளில்லாத நீர்மூழ்கி கப்பலை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள ஈரான், அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் கடலுக்கடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தங்களது பழைய நீர்மூழ்கி ட்ரோன் பழுதடைந்த நிலையில் மாயமாகிவிட்டதாக தெரிவித்துள்ளது. எனினும், ஈரான் கடற்படை கைப்பற்றியது அந்த சாதனம் தானா? என்று கூறவில்லை.
இந்நிலையில் ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
















