இஸ்லாமிற்கு மதம் மாறியவர்களுக்கு, பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் “முஸ்லிம் லெப்பாய்” போன்ற குறிப்பிட்ட சமூகச் சான்றிதழ்களை வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம், கடந்த 2015-ஆம் ஆண்டு இஸ்லாமிற்கு மாறி தனது பெயரை ‘சமீர் அகமது’ என மாற்றம் செய்து, “முஸ்லிம் லெப்பாய்” சமூகச் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார்.
அவரது விண்ணப்பத்தை வருவாய்த் துறையினர் நிராகரித்த நிலையில், அதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்த விசாரணையில், ஒருவர் இஸ்லாமிற்கு மதம் மாறினால் அவர் ஒரு இஸ்லாமியராகவே மட்டுமே கருதப்படுவார் எனவும்,
லெப்பாய், ராவுத்தர், மரக்காயர், ஷேக் அல்லது சையத் போன்ற குறிப்பிட்ட இஸ்லாம் சமூகங்களின் உறுப்பினராக மதமாற்றத்தின் மூலம் ஆக முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், லெப்பாய், ராவுத்தர் போன்ற சமூகங்கள் பிறப்பின் அடிப்படையில் உருவாகியவை என குறிப்பிட்ட நீதிபதிகள்,மனுதாரருக்கு “முஸ்லிம் லெப்பாய்” சமூகச் சான்றிதழ் வழங்க முடியாது என தீர்ப்பளித்தனர்.
















