பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரைக் கொலை செய்ய இஸ்ரேல் சதித் திட்டம் தீட்டியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை, ஒரு சர்வதேச படுகொலைக்கான களமாக அமைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்தச் சதித்திட்டம் குறித்த தகவலை பிரேசிலைச் சேர்ந்த புவிசார் அரசியல் ஆய்வாளர் பெப்பே எஸ்கோபர் தெரிவித்துள்ளார்.
பிரபல அரசியல் விமர்சகர் மரியோ நௌஃபால் தொகுத்து வழங்கிய ஒரு பாட்காஸ்டில் கலந்து கொண்ட பெப்பே எஸ்கோபர், மிக சாதாரணமாக இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
100 நாட்களுக்கும் மேலாக நடந்த ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும், ஈரானும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. இறுதியில் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருநாடுகளும் மத்தியஸ்ராக உள்ள பாகிஸ்தான் முன்னிலையில் கையெழுத்திட்டன.
மேலும் 60 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த இருநாடுகளும் சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம் முதல் கட்டப் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டு முக்கிய முடிவுகளை ஒப்புக் கொண்டனர். ‘
இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அந்நாட்டின் இராணுவத் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் உட்பட அந்நாட்டின் தூதுக் குழுவினரும் சுவிட்சர்லாந்து சென்றிருந்தனர்.
ஈரான், அமெரிக்கா இடையே முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் தூதுக்குழுக்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள பர்கன்ஸ்டாக் ரிசார்ட்டில் தங்கி இருந்தன.
இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் மற்றும் பாகிஸ்தான் தூதுக்குழுவின் மற்ற உறுப்பினர்களையும் சுவிட்சர்லாந்தில் வைத்து படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உத்தரவின் பேரில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் தீட்டிருந்த சதித் திட்டம் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திற்கு மிகவும் நம்பகமான தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் படுகொலை சதித் திட்டத்தை முறியடித்த பாகிஸ்தான் உளவுத் துறை, ஓமனில் உள்ள இடைத்தரகர்கள் மூலமாக தங்கள் தூதுக்குழுவை நீங்கள் தொட்டால், உங்களை வரைபடத்திலிருந்தே துடைத்தெறிவோம், அவ்வளவுதான்.” என்ற கடுமையான எச்சரிக்கையை இஸ்ரேலுக்கு அனுப்பியதாக பெப்பே எஸ்கோபர் கூறியுள்ளார்.
தனது குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரத்தையும் வெளியிடாத பெப்பே எஸ்கோபரின் தகவல்களை பாகிஸ்தான், இஸ்ரேல், சுவிட்சர்லாந்து ஓமன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை.
ஆனாலும் அசிம் முனீரைக் கொல்ல சதி என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய உடனேயே ஒரு மூத்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி முற்றிலுமாக இந்தச் செய்தியை நிராகரித்ததாகவும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீர் ஆகியோரின் சுவிட்சர்லாந்து பயணம் எந்தவித இடையூறும் இன்றி “கடிகார முள் போல சீராக” நடைபெற்றது என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
















