சென்னை முழுவதும் நடைபாதை அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட 284 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், நகரின் முக்கிய சாலைகளில் நடைபாதை அமைக்கும் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான டெண்டர்களைச் சிறப்புத் திட்டங்கள் துறை பிப்ரவரி 20-ம் தேதி வெளியிட்டது. எனினும், சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், பணி ஆணைகள் வழங்கப்படவில்லை.
நடைபாதை அமைக்கும் பணிகளுக்குப் பொதுவாக ஒரு திட்டத்திற்கு ஒன்றரை கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவாகும் என்ற நிலையில், இத்திட்டத்தில் அந்தச் செலவு நான்கு மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஒரு சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் சாதகமாக டெண்டர்கள் அமைக்கப்பட்டதாகவும், திட்ட அறிக்கையில் தேவையற்ற பணிகள் சேர்க்கப்பட்டு அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இது முறைகேடு என்று கண்டறியப்பட்டதால் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விரிவான திட்ட அறிக்கை தற்போது மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















