ஈரான் போர் தொடங்கியதில் இருந்தே ஹார்முஸ் ஜலசந்தி ஒரு யுத்த களமாகவே மாறியுள்ளது. அந்தக் கடல்பாதையின் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் ஈரான் அவ்வழியாக செல்லும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருகிறது. ஈரானின் தாக்குதல்களால் இதுவரை 11 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த மார்ச் ஒன்றாம் தேதி ஓமன் கடற்கரைக்கு அப்பால் மார்ஷல் தீவுகளின் கொடியுடன் வந்த MKD Vyom என்ற வர்த்தகக் கப்பல் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு இந்தியர் பலியானார்.
அதே நாளில் பலாவ் நாட்டின் கொடியுடன் வந்த ‘ஸ்கைலைட்’ (Skylight) என்ற வர்த்தகக் கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்தியக் கப்பல் ஊழியர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மே 8 ம் தேதி, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே மரப்படகில் ஏற்பட்ட தீவிபத்தில் அதில் பயணம் செய்த மூன்று இந்தியர்களில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்தார்.
தொடர்ந்து ஜூன் மாதத் தொடக்கத்தில், ஓமன் கடல் வழியாகச் சென்ற ஈரானின் எண்ணெயை ஏற்றிச் சென்ற MT Settebello என்ற வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
மீட்பு நடவடிக்கையில் 21 மாலுமிகள் காப்பாற்றப்பட்டாலும் பயிற்சி அதிகாரியான ஆதித்யா சர்மா, ஃபிட்டர் சிவானந்த் சௌராஷியா மற்றும் தலைமைப் பொறியாளர் பட்னாலா சுரேஷ் ஆகியோர் சடலங்களாக அடையாளம் காணப்பட்டனர்.
முன்னதாக M/T Marivex என்ற வர்த்தக கப்பல் மீது அமெரிக்க நடத்திய தாக்குதலில் அந்தக் கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்குப் பகுதியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மொம்பாசா மற்றும் அல் பஹியா என்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியுள்ளன.
மொம்பாசா கப்பலில் இருந்த ஒரு இந்தியப் பணியாளர் கொல்லப்பட்ட நிலையில் ஆறு இந்தியர்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓமன் கடற்கரைக்கு அப்பால், சைப்ரஸ் நாட்டு கொடியுடன் 11 இந்தியர்கள் பயணித்த GFS Galaxy கண்டெய்னர் கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் ஒரு இந்தியர் காணாமல் போன நிலையில், 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஈரானின் தாக்குதலைக் கண்டித்துள்ள இந்தியா, ஹார்முஸ் ஜலசந்தியில் பொதுமக்கள் சார்ந்த கப்பல் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புகளைக் குறிவைக்கும் நடவடிக்கைகள் முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஈரானுடனான ஒப்பந்தம் ரத்தான நிலையில் ஹார்முஸ் ஜசந்தியில் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. அப்பகுதியில் சிக்கியுள்ள இந்தியா தொடர்புள்ள ஒன்பது டேங்கர் கப்பல்கள் தங்கள் பயணத்தைக் தொடர முடியாமல் உள்ளனர். அந்தக் கப்பல்களில் 198 இந்தியக் குழுவினர் அச்சத்துடன் நடுக்கடலில் நங்கூரமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
வாரக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ ஒரே இடத்தில் முடங்கிக் கிடப்பது, கப்பல்களுக்கும் அவற்றில் உள்ள குழுவினருக்கும் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
போர்ச் சூழலுக்கு மத்தியிலும், ஹார்முஸ் நீரிணை வழியாக வெற்றிகரமாகப் பயணித்த இந்தியர்களுக்கு, இப்போது நிலைமை மேலும் மோசமானதாக அமைந்துள்ளது.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மாலுமிகளை வழங்கும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. சர்வதேச வர்த்தக கப்பல்களில் சுமார் 3,00,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். இது உலகின் கடல்சார் பணியாளர்களில் சுமார் 12 சதவீதமாகும்.
ஈரான் போர் வளைகுடாப் பகுதி கடற்பரப்பை ஒரு ஆபத்தான யுத்தக் களமாக மாற்றியுள்ள நிலையில் இந்திய மாலுமிகளுக்கு அதிகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சிக்கியுள்ள இந்தியக் குழுவினரின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தை ஈரான் அரசுடன் இந்திய வெளியுறவு அமைச்சகம் எடுத்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















