அப்துல் கலாமின் அரசியல் நெறிமுறைகளை பின்பற்றி ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக வி த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாமின் 11வது நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரம் பேக்கரும்பு பகுதியில் உள்ள தேசிய நினைவிடத்தில் அண்ணாமலை, பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் ஜமால் சித்திக் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, அப்துல் கலாமின் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அறிவியலும், ஆன்மிகமும் கலந்து இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் விரும்பியதாக கூறினார். சிறிய தீவில் பிறந்து நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பாடுபட்டவர் அப்துல் கலாம் என புகழாரம் சூட்டிய அவர், கலாமின் பேச்சை கேட்ட மாணவர்களில் தாமும் ஒருவர் என தெரிவித்தார்.
















