இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த 2047ம் ஆண்டுக்கான திட்ட வரைப் படத்தை விவரித்துள்ளார். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஏற்கெனவே கடந்த மார்ச் 20ம் தேதி, ‘பாதுகாப்புப் படைகளுக்கான தொலைநோக்குப் பார்வை 2047: எதிர்காலத்திற்குத் தயாராகும் இந்திய ராணுவத்திற்கான ஒரு செயல் திட்டம்’ என்ற கையேட்டை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
இதில் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான திறன் கொண்ட நவீன, ஒருங்கிணைந்த, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ராணுவமாக முப்படைகளை மாற்றுவதற்கான விரிவான செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் பாதுகாப்புக்கும் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கும் இடையே உள்ள தொடர்பை வலியுறுத்தியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்நாட்டுப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தாமல் 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியாது என்று கூறியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல், நக்சலிசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நிலவிய அமைதியின்மை போன்ற சவால்கள் தீவிரமடைவதற்கு முன்பே முந்தைய அரசுகள் அவற்றைக் கணித்திருந்தால், நாடு பல தசாப்தங்களாகப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகச் சவால்களைச் சந்தித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற உளவுத்துறையின் தேசிய பாதுகாப்பு உத்தி மாநாட்டின் நிறைவு விழாவில் சிறப்புரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஊடுருவல், பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக இருந்த மூன்று முக்கிய விவகாரங்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்துள்ளது என்று கூறிய அமித் ஷா, இந்த வெற்றிக்கு மாநிலக் காவல் படைகள், மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகள் ஆகியவற்றின் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு மற்றும் உறுதியான நடவடிக்கைகளே காரணம் என்று பாராட்டியுள்ளார்.
அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்புச் சூழலை வடிவமைக்கக்கூடிய போக்குகளில் கவனம் செலுத்துமாறு உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு முகமைகளை வலியுறுத்தியதுடன் எதிர்காலச் சவால்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவை பெரிய நெருக்கடிகளாக உருவெடுப்பதற்கு முன்பே அவற்றை முறியடிப்பதற்கான உத்திகளை இந்த தேசிய பாதுகாப்பு உத்தி மாநாடு வகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களும் அடுத்த 12 மாதங்களுக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என உறுதியளித்த அமித் ஷா, இந்த சீர்திருத்தங்கள் மூலம் பதிவாகும் வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை சென்றாலும், 3 ஆண்டுகளுக்குள் தீர்வு காண வழிவகை செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
கடந்த எட்டு மாதங்களில் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் அனைத்து மாநிலங்களுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், விரிவான நான்கு அம்சங்களைக் கொண்ட எல்லைப் பாதுகாப்பு வரைமுறையை அம்மாநிலங்களுடன் பகிர்ந்துள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுளளார்.
மேலும் குறுகிய காலத்திற்குள் இந்தியாவைச் சட்டவிரோத ஊடுருவல் இல்லாத நாடாக மாற்றுவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நாடு ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல என்றும், இந்தியாவில் வாழும் உரிமை இந்நாட்டு குடிமக்களுக்கு மட்டுமே உண்டு என்று உறுதியாக கூறியுள்ள அமித் ஷா, சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் தேசிய பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் மக்கள்தொகை சமநிலைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும் எச்சரித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றி பேசிய அமித் ஷா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்ட பின்னர் அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை சுட்டிக்காட்டி, அதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான திறமையான ஒருங்கிணைப்பின் குறிப்பிடத்தக்க உதாரணமாக எடுத்துக் காட்டியுள்ளார்.
பயங்கரவாத வலைப்பின்னல்களை முழுமையாக ஒழிப்பதை உறுதி செய்வதற்காக, பிரஹார் (PRAHAR) கொள்கை ஆவணங்களைத் தாண்டி, அன்றாடப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்றும் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கும், எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்கும், ‘Detect, Disrupt and Destroy’ என்ற உத்தியைப் பின்பற்றுமாறு காவல்துறையினரை வலியுறுத்தியுள்ள அமித் ஷா, 2026 முதல் 2029 வரையிலான போதைப்பொருள் கட்டுப்பாட்டு தொலைநோக்கு ஆவணத்தை அனைத்து மாநிலங்களும் கள அளவில் செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் CCTNS, ICJS, NATGRID மற்றும் NAFIS ஆகியவற்றை இணைக்கும் ஒருங்கிணைந்த தரவுத்தளங்கள் ஒரு சக்திவாய்ந்த புலனாய்வுச் சூழலை உருவாக்கியுள்ளன என்று குறிப்பிட்ட அமித் ஷா, இளம் அதிகாரிகள் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வை பயன்படுத்தி எதிர்கால அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதாரக் குற்றவாளிகளையும், தப்பியோடியவர்களையும் இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வலுப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட அமித் ஷா, 2019 மற்றும் 2026-க்கு இடையில் ஏற்கெனவே தப்பியோடிய சுமார் 274 இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகள் இந்தியச் சட்டத்தின் பிடியில் கொண்டுவரப்படுவதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உலகளாவிய நிலையற்ற தன்மை, எரிசக்தி மற்றும் வளப் பாதுகாப்பின்மை, விநியோகச் சங்கிலி இடையூறுகள், அதிகரித்து வரும் தீவிரவாதம் மற்றும் இணையவழித் தவறான தகவல் பிரச்சாரங்கள் என வளர்ந்து வரும் சவால்களைச் சமாளிக்க தொடர்ச்சியான கண்காணிப்பு தேவைப்படுவதாகவும் அமித் ஷா கூறியுள்ளார்.
உள்நாட்டுப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவை பெரிய சவால்களாக உருவெடுப்பதற்கு முன்பே அவற்றை ஒழித்துக்கட்டும் வகையில் நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அமித் ஷா, இத்தகைய அணுகுமுறை, பாதுகாப்பான, ஊடுருவல்காரர்கள் மற்றும் போதைப்பொருள் அற்ற இந்தியாவை உருவாக்க உதவும் என்று கூறியுள்ளார்.
















