சென்னையில் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை அரசு கருவூலத்தில் செலுத்தாமல் உள்ள போக்குவரத்து காவல் நிலையங்கள் அபராதம் வசூலிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பரங்கிமலை, மீனம்பாக்கம் விமான நிலையம் உள்ளிட்ட 10 போக்குவரத்து காவல் நிலையங்களில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் இதுவரை அரசு கருவூலத்தில் செலுத்தப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதை அடுத்து, நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்படும் வரை புதிதாக அபராதம் வசூலிக்க காவல் ஆணையர் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அபராதத் தொகை கையாடல் செய்யப்படவில்லை என போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
வசூலிக்கப்பட்ட அபராதங்களுக்கான ஆவணங்கள் ஆன்லைன் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், நீதிமன்ற போர்ட்டலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக முறையாக பதிவாகாமல் நிலுவையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், வேறு ஏதேனும் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
















