நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில், புலி தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக 48 மணி நேர வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கூடலூர் ஓவேலி அருகே பாலசுப்பிரமணி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இரண்டு நபர்கள் புலியின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த நிலையில் ஆட்கொல்லி புலியை பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையொட்டி கூடலூர் முழுவதும் 48 மணி நேர வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, வாகன பழுதுபார்ப்போர், ஓட்டுநர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், கூடலூர் நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனிடையே, வனத்துறையினர் 80 இடங்களில் தானியங்கி கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் மற்றும் கூண்டுகள் அமைத்து புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டும், இதுவரை புலி சிக்கவில்லை. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புலியை விரைந்து பிடிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து புலியை பிடிக்க போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பகல் நேரத்திலேயே புலி உலா வந்ததால் பொதுமக்கள் மேலும் பீதியடைந்தனர். கடந்த இரண்டு நாட்களாக கூடலூரிலுள்ள விமலகிரி , நம்பாளக்கோட்டை , பகுதிகளில் புலி நடமாட்டம் இருந்த வீடியோ பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அத்திப்பாளளி பகுதியிலும் புலி நடமாட்டம் காணப்பட்டது
தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த புலி, குடியிருப்பு அருகே நடந்து சென்றதை அப்பகுதி மக்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்தில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
















