சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இணைந்து உருவாக்கியுள்ள மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்’ (Mecca Defence Pact) இணையுமாறு ஈரான் நாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானும், சவூதியும் ஒரே அணியில் இருப்பது வளைகுடா அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படும் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
துருக்கிக்கு இஸ்ரேலிய அச்சுறுத்தல். சவூதிக்கு ஈரான் அச்சுறுத்தல். பாகிஸ்தானுக்கு இந்திய அச்சுறுத்தல் என முப்பெரும் அச்சுறுத்தல்களைக் கொண்ட இந்த மூன்று நாடுகளும் ஒன்றாக கடந்த ஆகஸ்ட் 7 ம் தேதி மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தம் எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் குறிவைப்பதை விட, பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மூன்று நாடுகளும் தெரிவித்திருந்தன.
உறுப்பு நாடுகளில் ஒன்று தாக்கப்பட்டால் அதை மற்ற உறுப்பு நாடுகளையும் தாக்கியதாக கருதப்படும் என்ற நேட்டோவின் ஐந்தாவது ஷரத்து போன்று ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த இஸ்லாமிய நேட்டோ கூட்டணி புவிசார் அரசியலில் ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் உலகம் முழுவதும் மிக வலிமையாக உள்ள ஐரோப்பிய யூனியன் கூட இப்படி ஒரு இராணுவ உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்பதுதான்.
இந்நிலையில் சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு மெக்கா கூட்டுப் பாதுகாப்பு கூட்டணியில் சேர ஈரானுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதால் விரைவில் எதிர்பாராத நான்காவது உறுப்பினராக ஈரானும் இணையக்கூடும் என்று கூறப் படுகிறது.
மெக்கா ஒப்பந்தத்தில் சேர ஈரானுக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் அது குறித்து பரிசீலனை நடந்து வருவதாகவும் ஈரானின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற உள்ளதாகவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் (Khaneh Mellat) கானே மெல்லட் செய்தி நிறுவனத்தின் தலைவர் (Mehdi Rahimi), மெஹ்தி கூறியதாக Al Mayadeen இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஈரானுக்கு கிடைத்த வெற்றி இது என்று கூறப்பட்டாலும் ,இதை ஈரானோ சவூதி அரேபியாவோ , பாகிஸ்தானோ மற்றும் துருக்கியோ இந்தச் செய்தியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
முன்னதாக இந்த ஒப்பந்தம் குறித்து கவலைப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கூறிய ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், பிராந்திய நாடுகள் தங்கள் சொந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்வதன் அவசியத்தை உணர்ந்து வருவதையே இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
சவூதியுடன் பல ஆண்டுகளாக பகைமை பாராட்டி வருகிறது ஈரான். யேமனில் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்புக்கு எதிராக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசை சவூதி ஆதரித்து வருகிறது. மேலும் ஈரான் ஆதரவு ஹூதிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளிலும் சவூதி ஈடுபட்டுவருகிறது.
நீண்ட ஆண்டுகளுக்குப் பின் சீனாவின் முயற்சியால் ஈரானும், சவூதியும் 2023-ல் தூதரக உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக்கொண்டன.
கடந்த பிப்ரவரியில் ஈரான் போர் தொடங்கியதில் இருந்து சவூதி மற்றும் பிற வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் இருநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் 2018-ல் சந்தேகமே இல்லாமல் ஈரான் அணு குண்டை உருவாக்கினால், தாங்களும் விரைவில் அணுகுண்டை தயாரிப்போம் என்று சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெளிவாக கூறியிருந்தார்.
தொடர்ந்து தனது ‘விஷன் 2030’ பொருளாதாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் சவூதி கையெழுத்தெட்டுள்ளது.
இந்நிலையில் மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஈரானும் இணைய சவூதி சம்மதிக்குமா? என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
















