ஈரான் மீது அமெரிக்கா அறிவித்துள்ள Economic D-Day என்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளால் வர்த்தக ரீதியாகவும், எரிபொருள் விநியோகத்திலும் நேரடி மற்றும் மறைமுகப் பாதிப்புகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய ஈரான் போர் 5 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை அமெரிக்கா, ஈரானின் வருவாய்க்கான அனைத்து சாத்தியமான வழிகளையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட Economic D-Day என்ற புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அறிவித்தது.
மற்ற நாடுகள் ஈரானுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்க வேண்டும் அல்லது டாலர் அடிப்படையிலான நிதி அமைப்பிலிருந்து வெளியேற்றப்படும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், ஈரான் தனது எண்ணெயைப் பணமாக மாற்ற உதவும் எந்தவொரு நிறுவனமும் அமெரிக்காவின் இலக்காக இருக்கும் என்றும் அமெரிக்காவின் தடைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை என்றும் கூறியிருந்தார்.
அமெரிக்காவின் அறிவிப்பு வெளியான உடனேயே நாணயச் சந்தைகளில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியாலின் மதிப்பு 2.02 மில்லியனாக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.
இந்நிலையில் ஈரானின் எண்ணெய் வர்த்தகத்திற்கு உதவுவதாகச் சந்தேகிக்கப்படும் சீன நிதி நிறுவனங்கள் எதையும் சேர்க்காமல், அமெரிக்கக் கருவூலத் துறை தனது புதிய தடைகள் பட்டியலில் 60 தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்களின் பெயர்களைச் சேர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் ஐந்து பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2018-2019-ல் உச்சபட்ச அளவான 17 பில்லியன் டாலரிலிருந்து 90 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது.
என்றாலும் நடப்பு ஆண்டின் முதல் பாதியில் இந்தியா 383.11 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசியை இந்தியாவில் இருந்து ஈரான் இறக்குமதி செய்துள்ளது.
இதன் மூலம், இந்தியாவின் பாஸ்மதி உள்ளிட்ட உயர்தர அரிசியை வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக ஈரான் மாறியுள்ளது. அரிசியை அடுத்து ஈரான் இந்தியாவிலிருந்து அதிகமான தேயிலையை இறக்குமதி செய்து வருகிறது.
ஈரானுக்கான இந்தியாவின் பெரும்பாலான ஏற்றுமதிகள் துபாய் துறைமுகங்கள் வழியாகவே நடைபெற்று வருகின்றன. போர் காரணமாக ஈரானுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகள், பரிமாற்றங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்ததைத் தொடர்ந்து, ஏற்கெனவே ஈரானுக்கான இந்திய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சுமார் 707 மில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெய்யை ஈரான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
அதனுடன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு, ஆப்பிள்கள், பேரீச்சைகள், பாதாம் மற்றும் கிவி பழம் போன்றவற்றையும் இந்தியாவுக்கு ஈரான் ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தப் பின்னணியில் ஈரான் மீது அமெரிக்காவின் எக்கனாமிக் டி டே நடவடிக்கை இந்தியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கிடையே ஈரான் நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
ஈரானிடமிருந்து பெட்ரோலியம் அல்லது பெட்ரோலியப் பொருட்களை வாங்குதல், சேமித்தல், விற்பனை செய்தல், போக்குவரத்து செய்தல் தொடர்பான நடவடிக்கைகளில் தெரிந்தே ஈடுபட்டதால், இந்நிறுவனங்கள் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















