பண்ருட்டி அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கொடுக்காததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பி.என்.பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்துள்ளனர்.
ஆனால், 15 நாட்களுக்கும் மேலாக நெல் மூட்டைகள் எடை போடப்படாமல் கிடப்பதாகவும், மூட்டைக்கு 50 ரூபாய் வழங்கினால்தான் எடை போடப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தொடர் மழையால் நெல்மணிகள் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளதாகவும், கொள்முதல் நிலையம் முழுவதும் சகதியாக காட்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். லஞ்சம் கொடுக்க மறுத்தால் நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை எனவும் கூறியுள்ளனர்.
சிமெண்ட் களம், தார்ப்பாய் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை 3 நாட்களுக்குள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
















