கேரளாவில் வெறிநாய் நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக்கொலை செய்ய அரசு அனுமதி வழங்கி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கேரள அரசு வெளியிட்டுள்ள தகவலில், மாநில உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் கருணைக்கொலை நடவடிக்கையில், அனைத்து தெருநாய்களும் கொல்லப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குணப்படுத்த முடியாத தீவிர நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் நாய்கள் மட்டுமே கருணைக்கொலை செய்ய அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் ‘தெருநாய் மேலாண்மைக் குழு’ அமைக்கப்படும் என்றும்,
குழுவின் தலைவர் மற்றும் தகுதி வாய்ந்த அரசு கால்நடை மருத்துவரின் எழுத்துப்பூர்வப் பரிந்துரைக்குப் பிறகே ஒரு நாயைக் கருணைக்கொலை செய்ய அனுமதி அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாய்களைப் பிடிக்கும்போதும், கருணைக்கொலை செய்யும்போதும் எவ்வித கொடூரமான அல்லது வன்முறையான முறைகளையும் கையாளக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.
துப்பாக்கியால் சுட்டோ, நஞ்சு கொடுத்தோ அல்லது தடியால் அடித்தோ கொல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்,
தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவர் மூலம், நரம்பு வழியாக குறிப்பிட்ட மருந்துகளைச் செலுத்தி மட்டுமே வலியற்ற முறையில் உயிரிழக்கச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பிற நாய்களின் முன்னிலையில் கருணைக்கொலை நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
















