பால் கொள்முதல் விலையை 44 ரூபாயாக உயர்த்துவது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஆவின் பால் கொள்முதல் விலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் முக்கிய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அப்போது பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, ஆவினுக்கு பால் வழங்குவது ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது என்றும், தீவனங்கள் விலை உயர்வால் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை கட்டுப்படியாகவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், கேரளத்தில் ஒரு லிட்டர் 45 ரூபாய்க்கு பாலை கொள்முதல் செய்வதுபோல தமிழகத்திலும் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பால் கொள்முதல் விலை போதாது என தமிழ்நாடு முழுவதும் பால் முகவர்கள் போராட்டம் நடத்தி வருவதாக கூறினார். மேலும், ஒரு லிட்டர் பசும்பால் 50 ரூபாய், எருமை பால் 60 ரூபாய் என கொள்முதல் விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்குவது மிக முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை என தெரிவித்தார். 2021ல் திமுக அரசு ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததால் ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், விலை குறைப்பினால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யவும், பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் திமுக அரசு மெத்தன போக்கில் செயல்பட்டது எனவும் குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு பிறகே பால் கொள்முதல் விலையை உயர்த்தியது என்றும், தவெக ஆட்சி பொறுப்பேற்று மூன்றே மாதத்தில் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளது எனவும் கூறினார்.
















