காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் திருவேட்டக்குடி காலனியை சேர்ந்த ரேவதி என்பவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு, வெண்டிலேட்டர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். சிதம்பரம் அருகே சென்றபோது ரேவதி சுவாசித்து கொண்டிருந்த ஆக்சிஜன் டியூப் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதில் ரேவதி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அதே ஆம்புலன்ஸில் சடலம் கொண்டு வரப்பட்டது. தகவல் அறிந்து கோட்டுச்சேரி எம்எல்ஏ விக்னேஸ்வரன் அங்கு வந்த நிலையில், மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் ரேவதியின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்புலன்ஸை பறிமுதல் செய்தனர்.
















