நாட்டில் விண்வெளி திட்டம் தொடங்கியபோது ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மூன்றாவது தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், நாட்டின் விண்வெளிப் பயணம் எளிய முறையில் தொடங்கியதாக பெருமிதம் தெரிவித்தார்.
ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்லும் அளவுக்கு கூட வாகன வசதி இல்லாமல், ஆரம்ப காலங்களில் பழைய மிதிவண்டிகளை பயன்படுத்தியதாக கூறிய அவர், அந்த எளிய தொடக்கத்திலிருந்து தற்போது இந்தியா விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளதாக தெரிவித்தார்.
சந்திரயான்-3 நிலவின் தென் துருவப் பகுதியை ஒட்டிய பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியதுடன், ஏராளமான அறிவியல் தரவுகளையும் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், சந்திரயான்-3 சாதனை உலகம் முழுவதும் உள்ள 140 கோடி இந்தியர்களுக்கும் உத்வேகம் அளித்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
















