பழைய இராணுவக் கட்டமைப்புக்கு பதிலாக, ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரின் கட்டுப்பாட்டுக்குள் முப்படைகள், அரசு நிர்வாகம் மற்றும் நீதித் துறை உள்ளிட்ட அனைத்தும் கொண்டுவரப் பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் கொண்டுவரப் பட்ட இந்த மாற்றங்கள் பாகிஸ்தானை அசிம் முனீரின் முடியரசாக்கி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2024-ல் ஒரு சர்ச்சைக்குரிய நடவடிக்கையாக, பாகிஸ்தானின் முப்படைகளின் தளபதிகளின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. 64 வயது என்ற வயது வரம்பும் நீக்கப்பட்டது.
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட அசிம் முனீர், இந்தியாவுக்கு எதிராக இரட்டை கோட்பாடு குறித்தும் காஷ்மீர் பாகிஸ்தானின் கழுத்து நரம்பு என்று பேசியும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். பதிலடியாக இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் பெரும் இழப்புகளைச் சந்தித்து பாகிஸ்தான் தோல்வியுற்றது.
அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற சிலவாரங்களே இருந்த நிலையில் அசிம் முனீர் தன்னை தானே ஃபீல்ட் மார்ஷலாக உயர்த்திக் கொண்டார். 1973ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு முதன்முறையாக ஒரு அதிகாரி ஃபீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத் தக்கது.
இதன் மூலம், இராணுவப் புரட்சியால் ஃபீல்ட் மார்ஷலாக தன்னைத்தானே நியமித்துக் கொண்ட அயூப் கானுக்குப் பிறகு இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது ராணுவத் தளபதி என்ற பெருமையைப் பெற்றார்.
பாகிஸ்தான் அரசியலமைப்பில் ஃபீல்ட் மார்ஷல் பதவிக்கு தற்போது சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாததால், அசிம் முனீரின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தது.
அசிம் முனீருக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் நீட்டிக்கப்பட்ட பதவியை திறம்பட வழங்குவதற்காக அரசியல் அமைப்பின் 243-வது பிரிவில் திருத்தம் அவசரம் அவசரமாக, கொண்டுவரப் பட்டது. கூடுதலாக 27வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவும் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, உடனடியாக நடைமுறைக்கு வந்தது.
இதன் மூலம் ஃபீல்ட் மார்ஷலுக்கு கூடுதல் அதிகாரங்களையும், வாழ்நாள் பாதுகாப்பையும் வழங்குவதோடு, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைத்து புதிய கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்தை உருவாக்கி உள்ளது.
இந்தச் சட்ட திருத்தம் கூட்டுப் படைத் தலைமைத் தளபதிகள் குழுவின் தலைவர் பதவியை ஒழித்து, பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி பதவியை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் மூன்று படைகளுக்கும் மேலாக இராணுவ வீரர்கள், கட்டளை மற்றும் வியூகம் ஆகியவற்றின் மீது குறிப்பிடத்தக்க அதிகாரங்களை அசிம் முனீர் கொண்டுள்ளார்.
முப்படைகளின் செயல்பாட்டுக் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டைச் செலுத்தும் பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதியான தேசியப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் பன்முக ஒருங்கிணைப்பு, செயல்பாட்டு ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைப்புக்குத் தலைமை ஏற்றுள்ளார்.
முப்படைகளின் தலைமையகமும் தனது கட்டுப்பாடில் இருப்பதால் தேசியப் பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் படைகள் தொடர்பான விஷயங்களில் பிரதமரின் முதன்மை இராணுவ ஆலோசகராகவும் அசிம் முனீர் உள்ளார்.
முப்படைகளில் ‘பணியமர்த்தும், பணிநீக்கம் செய்யும் மற்றும் ஓய்வுபெறச் செய்யும்’ அதிகாரமும் அசிம் முனீர் வசம் வந்துள்ளது. அதாவது யார் சீருடையில் நீடிக்க வேண்டும், யார் வெளியேற வேண்டும், யாருடைய ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும், மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வயது அல்லது சேவை வரம்புகளுக்கு அப்பால் யார் தொடரலாம் என்பதெல்லாம் இனி அசிம் முனீர் முடிவு செய்வார்.
இதனைத் தொடர்ந்து, உருவாக்கப்பட்ட தேசிய வியூக கட்டளைத் தளபதி பதவிக்கு லெப்டினன்ட் ஜெனரல்களுக்கான ராணுவத்தின் seniority list-ல் எட்டாவது இடத்தில் இருந்த ஜெனரல் சையத் ஆமர் ரசா நியமிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISIயின் தலைமை இயக்குநராகவும், நீட்டிக்கப்பட்ட பதவிக்காலத்துடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் மூத்த இராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் மாலிக் உள்ளார்.
தனது இராணுவ வாழ்க்கையை ஒரு குதிரைப்படை அதிகாரியாகத் தொடங்கிய ரசா, அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பிறகு, 1988-ல் 6வது லான்சர்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பல ஆண்டுகளாக பல மூத்த கட்டளைப் பதவிகளை வகித்துள்ள ரசா, ஒரு கவசப் படைப்பிரிவு, தெற்கு வஜீரிஸ்தானில் ஒரு காலாட்படைப் படைப்பிரிவு, ஒரு காலாட்படைப் பிரிவு மற்றும் லாகூரைத் தளமாகக் கொண்ட IV படைப்பிரிவு ஆகியவற்றுக்கும் தலைமை தாங்கியுள்ளார்.
வியூகத் திட்டப் பிரிவு’ (Strategic Plans Division) ராணுவ வியூகப் படைகள் கட்டளைப் பிரிவு’ (Army Strategic Forces Command) ஆகியவற்றில் பணியாற்றாத ரசா, பாகிஸ்தான் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் உத்திசார் கட்டளைகளை ஒன்றிணைக்கும் கட்டளையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் ஜனநாயகத்திற்கும், நீதித்துறை சுதந்திரத்திற்கும் எதிரான இந்த நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பின் கீழ் ராணுவ செல்வாக்கை ஒருங்கிணைப்பதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
அசிம் முனீரின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தானின் இராணுவ அதிகாரத்தைக் குவிக்கும் எந்தவொரு முயற்சியும் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
















