கொள்முதல் விலையை தனியாருக்கு நிகராக உயர்த்தக்கோரி தமிழகம் முழுவதும் 24-ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் விநியோகம் செய்வதை நிறுத்தப்போவதாக, பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி ஆவின் பால் கூட்டுறவு மையத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பால் கொள்முதல் விலையை முதலமைச்சர் 3 ரூபாய் உயர்த்தி 41 ரூபாயாக அறிவித்தபோதும், அந்த தொகை உற்பத்தியாளர்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை என்றும், லிட்டருக்கு 35 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
தனியார் நிறுவனங்களுக்கு இணையாக கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என வேதனை தெரிவித்தனர். இதனால், வரும் 24 ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் ஆவினுக்கு பால் விநியோகம் செய்வதை நிறுத்தி தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தனர்.
















