சர்வதேச அளவில் விண்வெளித் துறையில் திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
தேசிய விண்வெளி தினத்தையொட்டி டெல்லியில், விண்வெளித் துறையின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, சவாலான விண்வெளித் துறையில் களமிறங்கி, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெளிப்படுத்திய அசாத்திய தைரியத்தையும் புதுமையான முயற்சிகளையும் பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார்.
இந்திய அரசின் மீதான ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நம்பிக்கையை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, விண்வெளித் துறையில் உலகளாவிய திறமையாளர்களை இந்தியாவால் ஈர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். விண்வெளித் தொழில்நுட்பத்தை ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களுடன் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். உலக நாடுகள் விண்வெளித் துறையைப் பற்றிச் சிந்திக்கும் போது இந்தியாவின் பக்கம் திரும்பும் வகையில் வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
















