சமீப ஆண்டுகளாக சீனாவுக்குக் கழுதைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டாலர்களை அந்நியச் செலாவணியாக பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது. சீனாவில் பாகிஸ்தான் கழுதைகளுக்கு ஏன் இவ்வளவு மதிப்பு என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீனாவில், கழுதை தோலில் உள்ள ஜெலட்டின் மூலம் தயாரிக்கப்படும் பாரம்பரிய மருந்திற்கு அதிக தேவை உள்ளது. இது எஜியாவோ (Ejiao) என்று அழைக்கப்படுகிறது.
இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் இளமையை நீட்டிக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஜெலட்டின் பிரித்தெடுக்க கழுதை தோல்கள் வேகவைக்கப்படுகின்றன. பிறகு தூள், மாத்திரைகள் அல்லது திரவமாக மாற்றப்படுகின்றன. சில சமயங்களில் உணவில் சேர்க்கப்படுகிறது.
இதற்காகச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஆப்பிரிக்கா முதல் பாகிஸ்தான் வரை உலகளவில் சுமார் 59 லட்சம் கழுதைகள் ஒவ்வொரு ஆண்டும் கொல்லப் படுகின்றன.
உலகில் வாழும் 5.3 கோடி கழுதைகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆப்பிரிக்காவில்தான் இருக்கின்றன. ஆனால் அந்நாட்டின் விதிகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.
கழுதை தோல்களை ஏற்றுமதி செய்வது சில நாடுகளில் சட்டப்பூர்வமாகவும், சில நாடுகளில் சட்டவிரோதமாகவும் உள்ளது. ஆனால் அதிக தேவை மற்றும் தோலுக்கான அதிக விலை கழுதைகளின் திருட்டை தூண்டுகிறது. மேலும் வர்த்தகம் சட்டப்பூர்வமாக இருக்கும் இடங்களுக்குச் செல்ல விலங்குகள் சர்வதேச எல்லைகள் வழியாக கடத்தப்படுகிறது.
உலக அளவில் இது பெரும் சிக்கலாக உருவெடுத்திருந்தாலும் கழுதைகளை உற்பத்தி செய்வதில் மூன்றாவது இடத்தில் உள்ள பாகிஸ்தானைப் பொறுத்தவரை கழுதை அதிர்ஷ்ட விலங்காக மாறியுள்ளது. பாகிஸ்தானில் கழுதைகளின் எண்ணிக்கை சீராக வளர்ந்து 6.2 மில்லியனாக அதிகரித்துள்ளது.
ஆண்டுக்கு சுமார் 4 முதல் 6 மில்லியன் கழுதைத்தோல்கள் தேவைப்படும் சீனாவில் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி, வெளிநாடுகளில் இருந்து கழுதை இறக்குமதிக்கு வழிவகுத்துள்ளது. இந்த கழுதை விநியோகச் சங்கிலியில் பாகிஸ்தான் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது.
முன்னதாக 2014 முதல் 2016 வரை, பாகிஸ்தான் கிட்டத்தட்ட 200,000 கழுதைத் தோல்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்தது. துரதிர்ஷ்டவசமாக, இது பாகிஸ்தானிய சந்தைகளில் கழுதை இறைச்சியை மாட்டிறைச்சி என்று கூறி மோசடியாக விற்பனை செய்வதையும் அதிகரிக்க வழிவகுத்தது.
ஒரு இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இது ஒரு கடுமையான குற்றமாகக் கருதப்பட்டது. இதன் காரணமாக, அரசாங்கம் கழுதை மற்றும் கழுதைத் தோல் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. இருப்பினும், சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் தொடர்ந்து இயங்கிவந்தன.மேலும் அதிக தேவை காரணமாக கழுதைத் தோல்கள் பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்குள் கடத்தப்பட்டன
சீனாவின் அழுத்தத்தால் 2024-ல் கழுதைத்தோல் மற்றும் இறைச்சியை ஏற்றுமதிக்குப் பாகிஸ்தான் ஒப்புதல் அளித்தது. 2025-ல் குவாதரில் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் கழுதை வளர்ப்புப் பண்ணைகள், இறைச்சிக் கூடங்கள் மற்றும் ஏற்றுமதி வசதிகளை அமைக்க சீன நிறுவனங்களுக்குப் பாகிஸ்தான் அனுமதி அளித்தது.
மேலும் ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்புக்கான ஒரு சாத்தியமான ஆதாரமாக கழுதை வளர்ப்புத் துறையின் மூலம் பல திட்டங்களைப் பாகிஸ்தான் அரசு செயல்படுத்தியுள்ளது. ஒழுங்குமுறை நடைமுறைச் சிக்கல்களால் தடைபட்டிருந்த கழுதை இறைச்சி மற்றும் தோல் ஏற்றுமதிக்கு, கடந்த மே மாதத்தில் பாகிஸ்தான் அனுமதி கொடுத்தது.
மேலும் 2025- ஆகஸ்டில் கராச்சியின் லியாரி (Lyari) பகுதியில் கழுதை வண்டிப் பந்தயம் அரசின் ஆதரவுடன் பாகிஸ்தானில் நடத்தப் பட்டது.
சீனாவில் கழுதை தோலின் தேவை அதிகமாக இருப்பதால் பாகிஸ்தானில் முன்பெல்லாம் அதிகபட்சம் 30,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கழுதையின் விலை இப்போது 3 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஒரு காலத்தில் பெரும்பாலும் எளிய சுமை சுமக்கும் விலங்காகவே பார்க்கப்பட்ட கழுதைகள் ஏற்றுமதிச் சந்தைப் பொருளாக மாறியுள்ளது.
















