ஓணம் பண்டிகையையொட்டி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.
கோவையில் பிரசித்தி பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.ஓணம் பண்டிகையையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சுவாமி சன்னதி முன்பு டன் கணக்கில் பூக்களை கொண்டு பிரம்மாண்டமான அத்தப்பூ கோலம் அமைக்கப்பட்டுள்ளது.
வண்ணமயமான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அத்தப்பூ கோலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், மலையாள மொழி பேசும் மக்கள் புத்தாடைகள் அணிந்து, குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவில் முழுவதும் ஓணம் பண்டிகை உற்சாகம் நிறைந்து காணப்படுகிறது.
















