நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 160 பேர் உயிரிழந்த நிலையில், 133 இந்தியர்கள் உள்பட 750 பேர் மாயமாகியுள்ளனர்.
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி ஆற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. திபெத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் இமயமலையில் இருந்த மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பேரழிவில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த 37 பேர் உட்பட இந்தியர்கள் 133 பேர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. 160 பேர் உயிரிழந்த நிலையில், 750 பேர் மாயமாகியுள்ளனர். இதனிடையே, கோஷி ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்து வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.‘
சீன-திபெத் எல்லையில் உள்ள 5 மாடி குடியேற்றத் துறை அலுவலகத்தை நொடிப்பொழுதில் காட்டாற்று வெள்ளம் அடித்து சூறையாடியது. வெள்ளம் வருவதைக் கண்டு சுற்றுலா பயணிகள் அஞ்சி ஓடிய நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த பேரிடரில் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சீனாவின் திபெத் மற்றும் நேபாள எல்லையை இணைக்கும் கீரோங் துறைமுகப் பகுதியை பெருவெள்ளம் தரைமட்டம் ஆக்கியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு நொறுக்கப்பட்டன. உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பணியாளர்கள் ஓடிய நிலையில் அவர்களையும் சேர்த்து வெள்ளம் அடித்துச் சென்றது.
நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலங்கள் மற்றும் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. நுவாகோட், தாடிங் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களை காட்டாற்று வெள்ளம் சின்னாபின்னமாக்கியது.
அதேபோல் ஆற்றில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த வாகனம், சீறிப்பாய்ந்து வந்த வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது.
கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்களை அடித்துச் சென்றது. இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது
















