தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய கட்சியாக மாற்றும் வகையில் அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய்யும் அவரது ஆலோசகர்களும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய வெற்றிக் கழகம் என பெயரை மாற்றி விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தவெக ஆட்சி நடத்தி வருகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றாலும் அவ்வப்போது புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் தன் பக்கமே தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அண்மைக்காலமாகவே அமைச்சர்கள், அடுத்தடுத்து முதலமைச்சர் ஜோசப் விஜயை அடுத்த பிரதமர் என அழைப்பதும், வட மாநிலங்களில் விஜய்யின் ரீல்ஸ்களை அதிகளவில் பரப்புவதன் பின்னணியிலும் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது
தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சி தொடங்கி தமிழகத்தை மட்டும் ஆட்சி செய்யலாம் என்ற விஜய்யின் விருப்பம், மக்களிடம் கிடைத்திருக்கும் ஆதரவை தொடந்து அதனை மேலும் பல மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்யலாம் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது.
அதன்படி தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயர் தமிழகத்திற்கு மட்டுமே சரியாக இருக்கும் என்பதால் அதனை மாற்ற வேண்டும் என பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தை அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்ற வகையில் தேசிய வெற்றிக் கழகம் என மாற்றலாமா என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்திற்கு அடுத்தபடியாக விஜய்க்கு அதிகளவு ரசிகர் பட்டாளம் மிக்க கேரளத்தில் கட்சியை தொடங்க முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரஜினியின் பாட்சா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகர் தேவனை கேரள மாநிலத்தின் தலைவராக நியமிக்க விஜய் முடிவு செய்திருக்கிறார்.
சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர் விஜயை சந்தித்து அதிகாரப்பூர்வமான இணைப்பு நடைபெற்ற பிறகு அவருக்கு அம்மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் கேரளத்தில் கட்சியை தொடங்கி ஆட்சியை பிடிக்க முயலும் விஜய்யின் நடவடிக்கை காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் தொடங்கி பொதுக்கூட்டங்கள் வரை அமைச்சர்கள் அனைவரும் அடுத்த பிரதமர் விஜய் தான் என பேசுவது, ராகுலை பிரதமராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தவெக அமைச்சர்கள் ரசிக மனப்பான்மையிலேயே இருப்பதாக மாணிக்கம் தாகூர் அளித்த பதிலும் தவெகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு, கடந்த சில தினங்களாகவே தமிழகத்தை தாண்டி வடமாநிலங்களிலும் விஜய்யின் உரை பற்றிய ரீல்ஸ் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. அதற்காக தவெகவின் தேர்தல் வியூக அணி பல கோடி ரூபாய் செலவு செய்து வருவதாகவும், 2029 தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் ஜோசப் விஜயை தேசிய அளவிலான முகமாக மாற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தனக்கு கிடைத்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்த தவெக, தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜயை தேசிய அளவிலான தோற்றத்தை உருவாக்கி அவரை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய முனைந்திருப்பது காங்கிரஸை கழட்டிவிடுவதற்கான அறிகுறியை வெளிப்படுத்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
















