சென்னை மெரினா கடற்கரையில் காமராஜருக்கு இடம் தரவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர் பேசியது உண்மைக்கு மாறான செய்தி என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, காமராஜர் மரணமடைந்த செய்தி அறிந்தவுடன் அவருடைய இல்லத்திற்கு சென்று கருணாநிதி மரியாதை செலுத்தினார் என கூறினார்.
தேனாம்பேட்டை மைதானத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் விரும்பியதாகவும், கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் காமராஜர் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டு மண்டபம் கட்டப்பட்டது எனவும் தெரிவித்தார். காமராஜர் உடல் மெரினாவில் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எதுவும் எழுப்பப்படவில்லை என பழ.நெடுமாறன் கூட பேசியுள்ளார் என குறிப்பிட்டார்.
காந்தி மண்டபத்தில் இரவெல்லாம் தூங்காமல் அங்கேயே இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் கருணாநிதி எனக்கூறிய தங்கம் தென்னரசு, மெரினா கடற்கரைக்கு காமராஜர் சாலை எனப் பெயர் வைத்ததில் தொடங்கி, அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்த வரை எண்ணற்ற செயல்களை திமுக ஆட்சி செய்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் தாரகை கத்பட், நேற்றைய பேரவை கூட்டத்தில் தெளிவாக சொன்னேன் என்றும், கேட்டோம் கிடைக்கவில்லை என்று தான் கூறினேன் எனவும் தெரிவித்தார். மேலும், நாளைய கூட்டத்தில் இதற்கான வரலாற்றை சமர்ப்பிப்பேன் எனவும் தாரகை கத்பட் கூறினார்.
















