அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரத்தில் உயிரை மாய்த்து கொண்ட அனிதாவின் நினைவுநாள் என தெரிவித்தார்.
அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அரசியல் சார்பின்றி நடைபெற இருந்த நினைவு கூட்டத்திற்கு சென்னை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும் கூறினார். மேலும், ஜனநாயக முறையில் அமைதியாக நடக்க இருந்த நினைவஞ்சலி நிகழ்வுக்கு அரசு ஏன் அனுமதி வழங்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நினைவேந்தல் கூட்டத்தை நடத்த அனுமதி கோரி கடந்த 22 ஆம் தேதி அனுமதி கொடுக்கப்பட்டதாகவும், பெசன்ட் நகர் மாதா கோயில் திருவிழா காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். வேறு ஒரு இடத்தில் நினைவஞ்சலி நிகழ்வு நடத்தினால் அரசு அனுமதி தரும் எனக்கூறிய அவர், அனிதாவின் நினைவு நாளான இன்றாவது அரசியல் செய்யாமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், அரசியல் செய்யவில்லை என்றும், பெசன்ட் நகர் மாதா கோயிலை அமைச்சர் காரணம் காட்டியுள்ளார் எனவும் தெரிவித்தார். மேலும், வரும் 7ஆம் தேதி தான் தேர் திருவிழா நடைபெற உள்ளதால் இன்று அங்கு அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மாற்று இடத்திற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என கூறினார்.
















