இந்தியா எவ்வளவு சக்திவாய்ந்த நாடாக மாறுகிறது என்பதைக் கொண்டு அதன் எழுச்சியை அளவிடக்கூடாது என்றும், மாறாக, அது எவ்வளவு தூரம் ஒன்றிணைந்த மனிதகுலத்திற்குப் பங்களிக்கிறது என்பதைக் கொண்டே அளவிட வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
கனடாவின் டொராண்டோவில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக ‘ஹிந்து விஸ்வ பந்து – நட்புறவில் உலகைத் தழுவுவோம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், கனடாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கென்னி மற்றும் ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், இந்துக்கள் விழித்தெழுந்தால், உலகமும் விழித்தெழும் எனக் கூறினார். பிறருக்கு உதவும் பண்பு பாரதத்தின் பாரம்பரியத்தில் உள்ளது எனக்கூறிய அவர், பன்முகத்தன்மையே ஒரு வகையான ஒற்றுமையாக இருக்க முடியும் என தெரிவித்தார். இந்தியாவை ஒரு வல்லரசு என்று சிலர் அழைக்கலாம் என்றும், ஆனால் தனது சொந்தப் பண்பின் காரணமாக அது உலகிற்கு வழிகாட்டியாக மாறியதே தவிர, வெறும் மகாசக்தியாக மாறவில்லை எனவும் குறிப்பிட்டார். பரந்த மனப்பான்மையும் அறிவும் கொண்டவர்கள் பூமி ஒரே குடும்பம் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்கின்றனர் எனவும் கூறினார். மேலும், பாரதத்தின் எழுச்சி என்பது ஒன்றிணைந்த மற்றும் அதிக விடுதலை பெற்ற மனிதகுலத்தைக் குறிக்கிறது எனவும் மோகன் பாகவத் தெரிவித்தார்.















