நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் பணியாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வெங்கட ரமணன் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மயிலாடுதுறை மீனவர்கள் மாவீரன், சங்கர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஸ்ரீநாத், வெங்கட ரமணன் பங்கேற்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய அமைச்சர், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை 7 நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும், இடைத்தரகர்களை நம்பி குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
லஞ்சம் கேட்கும் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, மாற்றுப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
















