அனைத்து மதங்களும் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் என்றும், அனைத்து மனிதர்களுக்கும் சமமான கண்ணியம் உண்டு என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற ‘ஒன் வேர்ல்ட் ஒன் ஹியூமனிட்டி’ நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று பேசினார். அப்போது மதங்கள் பல இருந்தாலும், அவை பெரும்பாலும் சடங்குகளின் அடிப்படையில் வரையறுக்கப்படுவதாகவும், ஆன்மிகப் பாதையில் சடங்குகளும் அவசியம் என்றும் தெரிவித்தார்.
மனித சமூகத்திற்கு தொடர்ந்து கல்வியும் விழிப்புணர்வும் வழங்கப்படாவிட்டால், வரலாற்றில் ஏற்பட்டது போன்று பல்வேறு சிதைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பாரதத்தில் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என நினைக்கும் ஹிந்துக்கள் இந்துவாக இருக்க முடியாது என்றும், ஒவ்வொரு மனிதருக்கும் கண்ணியம் உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதே ஹிந்து சிந்தனை என்றும் மோகன் பாகவத் தெரிவித்தார்.
















