ஜல்லிக்கட்டு குறித்து சட்டப்பேரவையில் சர்ச்சையாக பேசிய தவெக எம்எல்ஏ கருப்பையாவுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று உரையாற்றிய சோழவந்தான் தவெக எம்எல்ஏ கருப்பையா, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு ஜல்லிக்கட்டு எனவும் அதற்கு செலவு செய்யும் பணத்தை சர்க்கரை ஆலைகளுக்கு கொடுக்கலாம் எனவும் கூறினார். அவரது பேச்சு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை இழிவுபடுத்துவதாக கண்டனம் வலுத்து வருகிறது.
இந்நிலையில் தவெக எம்எல்ஏ கருப்பையா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக, அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள எம்எல்ஏ இப்படி பேசியது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளது.
அதிமுக பெற்றுத்தந்த உரிமையை கீழ்த்தரமாக பேசியுள்ள எம்எல்ஏ-வின் பேச்சு ஏன் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை? எனவும், ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர நினைத்து அதற்கான First Look-ஆக MLA-வை முதலமைச்சர் பேச வைத்தாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையாவின் பேச்சிற்கு முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அதிமுக வலியுறுத்தியுள்ளது.
















