நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களில் 633 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பேரழிவால் நேபாள- சீன எல்லையில் இமயமலைப் பகுதியில் சுனாமி போன்ற பேரலைகளும் குப்பைக் கூளங்களும் கிராமங்களை மூழ்கடித்துச் சென்ற சில நாட்களுக்குப் பிறகும் அந்தத் துயரச் சம்பவத்தின் கோரத் தாண்டவத்தின் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
பனிப்பாறை சரிவுதான் இந்த பேரழிவிற்குக் காரணம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2015-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு நேபாளத்தைத் தாக்கிய மிக மோசமான பேரழிவு இதுவாகும்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களைக் கண்டறியும் தேடுதல் பணியில் நேபாளம் மற்றும் சீனாவைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திபெத்தின் கைலாச யாத்திரை சென்ற நூற்றுக்கணக்கான இந்துகள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் ஏற்கனவே காணாமல் போனோர் பட்டியலில் உள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நீர்மின் நிலைய ஊழியர்கள் 933 பேரையும் காணாமல் போனோர் பட்டியலில் நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் சேர்த்துள்ளது.
திரிசூலி ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ள சுரங்கங்களுக்குள் சிக்கிய சுமார் 350 தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100 பேர் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
திரிசூலி 3A நீர்மின் திட்டப் பகுதியில் உள்ள சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றுவதற்கான நுழைவுப் பாதையைக் கண்டறியும் பணியில் நேபாள ராணுவம் ஈடுபட்டுள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், உயிர் பிழைத்தவர்களைச் சென்றடைய மீட்புக் குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
தலைநகர் காத்மாண்டுவில், காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தேடி உறவினர்கள் மருத்துவமனைகளில் குவிந்துள்ளனர். சுவரொட்டிகளில் காணாமல் போனவர்களின் புகைப்படங்களும் பெயர்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக 977 பேர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது 517 வெளிநாட்டினர் உட்பட 1,924 பேருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், 579 பேர் உயிரிழந்ததாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்திலிருந்து பாயும் ஆறுகளில் இருந்து ஏழு உடல்களை மீட்டெடுத்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையே பனிக்கட்டி உடைந்து பெருக்கெடுத்தோடிய தண்ணீர் சேறும் சகதியுமாக ஆங்காங்கே பெரிய ஏரிகளையும் உருவாக்கியிருப்பது மீட்புக் குழுவினருக்கு நேரடி அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கிரிசாங் (Gyirong) பகுதியில் மீட்புப் பணிகளைச் சீனா தற்காலிகமாக நிறுத்தி வைத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக திபெத்தில் சிக்கியிருந்த 555 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 499 சீனக் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சீன அதிபர் ஜி ஜின்பிங், நேபாளத்தின் அவசரக்கால நடவடிக்கைகளுக்கு சீனாவின் உதவியையும் அறிவித்துள்ளார்.
















