சேலம் ராஜகணபதி கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 24ம் தேதி யாக சாலை பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிலையில் நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்த நிலையில் ராஜ கணபதிக்கு மலர் அலங்காரம் மற்றும் தங்கக் கவசம் அலங்காரம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு கோபுர கலசங்கள் மற்றும் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் மேளதாளங்கள் முழங்க கோபுர கலசங்கள் மற்றும் மூலஸ்தான கணபதிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்ற நிலையில் திரளான பக்தர்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
















