ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில், ஆபாச செயலிகள் என்ற பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபகாலமாக சமூக வலைதளங்கள் வாயிலாக ஆபத்தான ஆபாச செயலிகள் பரப்பப்பட்டு வருவதாகவும், விளம்பரங்களை கிளிக் செய்யும் பயனர்களை, சில ஆபாச இணையதளங்களுக்கு அழைத்துச் சென்று, அங்கு Google Play Store-க்கு வெளியே இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்ய வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயலிகள் மொபைலின் Accessibility அனுமதியை பெற்று, பயனருக்கு தெரியாமலேயே வங்கி மற்றும் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் அபாயம் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
Google Play Store அல்லது அங்கீகரிக்கப்பட்ட தளங்களில் இருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும், அறிமுகமில்லாத செயலிகளுக்கு Accessibility அனுமதி வழங்கக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மோசடியில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.















