காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணை திறப்பிற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை சேலம் சென்றார்.சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் விஜய்யை, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் வரவேற்றார்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பூசாரிப்பட்டி பிரிவு, வள்ளையூர்கோட்டை, ஜோடுகுளி, தீவட்டிப்பட்டி, மேச்சேரி வழியாக மேட்டூர் சென்றார். திறந்த வேனில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை நோக்கி கையசைத்தவாறு முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ நடத்தினார்.
அப்போது வழிநெடுகிலும், சாலையில் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்கள் முதலமைச்சர் விஜய்-க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் மேட்டூர் அணை வந்த முதலமைச்சர் விஜய்க்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் வலது கரையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை அவர் திறந்து வைத்தார். அணை திறக்கப்பட்டதும் வெளியேறிய காவிரி நீரில் மலர்கள் மற்றும் நெல்லை தூவி முதல்-அமைச்சர் விஜய் வரவேற்றார்.
டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் போன்ற 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன.
















