பழுதடைந்த பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பைப் திமுக அரசு பறிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே டயர் வெடித்து அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விண்ணைத் தொடும் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையைத் திமுக அரசு கண்டுகொள்ளாத வேளையில், கூட்டமாக இருந்தாலும் பரவாயில்லை என அரசுப் பேருந்தில் பயணித்தால், ஓட்டை உடைசல் பேருந்துகள் மூலம் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவது நியாயமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சியில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையான நிலையில், மக்களின் அடிப்படை போக்குவரத்துத் தேவையைக் கருத்தில் கொள்ளாது, விண்டேஜ் காரை ஓட்டி ஃபோட்டோஷூட் நடத்துவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின்ஆட்சியை மக்கள் கப்பலேற்றும் நாள் வெகுதூரமில்லை என்றும் நயினார் கூறியுள்ளார்.
















