புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸை அழைக்காமல் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதனடிப்படையில், இண்டி கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் விசிக மாநில செயலாளர் அரிமா தமிழன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சலீம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு இண்டி கூட்டணியின் மற்றொரு முக்கிய அங்கமான காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது மோதல் போக்கு வெடித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, திமுக நடத்திய கூட்டத்தை பற்றி தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், தங்களை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, இது ஒரு சாதாரணச் சந்திப்பு என்றும் தான் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் கூட்டணி கட்சியினரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தாகவும் கூறியுள்ளார். விரைவில் காங்கிரஸ் கட்சியினரையும் சந்திப்போம் எனவும் மழுப்பலாக பதிலளித்துள்ளார்.
















