விலங்குகள், இயற்கை ஆகியவற்றுடன் மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அறிவுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், விலங்குகள், தாவரங்கள், மனிதர்கள் என அனைத்தும் ஒரே சூழலின் ஒருபகுதி எனவும், ஒருவருக்கொருவர் இல்லாமல் இருக்க முடியாது என்பதைப் பற்றி உலகம் இப்போது சிந்திப்பதாகவும் கூறினார்.
அதே நேரத்தில், ஒன்றாக வாழ்வது நோய்கள் போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும் எனவும், விலங்குகள், இயற்கை ஆகியவற்றுடன் மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கால்நடை மருத்துவர்கள் பெரும் பங்கு வகிப்பதாகவும், அவர்கள் வெறும் விலங்குகளின் நிபுணர்கள் மட்டுமல்ல, சமூகத்தில் முக்கியமான பங்குதாரர்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியா ஒரு விவசாய நாடு என்றும், விவசாயிகளையும், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்களையும் ஆதரிப்பதில் கால்நடைத்துறை முக்கிய பங்கு வகிப்பதாகவும் மோகன் பாகவத் தெரிவித்தார்.
















