தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் திமுகவை பின்னுக்கு தள்ளி அதிமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. IANS-Matrize நடத்திய கருத்துக்கணிப்பு குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்…
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இதே போன்று கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் மாநிலங்களுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுதான் தாமதம், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வெளிவரத் துவங்கவிட்டன.. அந்தவகையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியை வீழ்த்தும் என்பது IANS-Matrize நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணி 39-40 சதவிகித வாக்குகளைப் பெற்று, 114 முதல் 127 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், ஆளும் திமுக 37-38 சதவிகித வாக்குகளைப் பெற்று 104 முதல் 114 இடங்களைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆளும் திமுக மற்றும் அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என்பது தெரியவந்துள்ளது. (NEXT) மேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களைத் தவிர மற்ற அனைத்து மண்டலங்களிலும் திமுகவை விட அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.
சென்னை மண்டலத்தில் திமுகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தவெக முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், அக்கட்சி 14 முதல் 15 சதவிகித வாக்குகளை பெற்று, குறைந்தது 6 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கேரளாவில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இரட்டை இலக்க வாக்கு சதவிகிதத்தைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. (NEXT) 140 தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் ஆட்சியைப் பிடிப்பதில் இழுபறி நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 61 முதல் 71 இடங்களையும், (NEXT) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 58 முதல் 69 இடங்களையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
126 தொகுதிகளை கொண்ட அசாமில் பாஜக கூட்டணி 96 முதல் 98 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு 26 முதல் 28 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 155 முதல் 170 இடங்கள் வரை திரிணாமுல்காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்றும், அதே நேரத்தில் பாஜக 100 முதல் 115 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் பாஜகவுக்கு அதீத வளர்ச்சியை தரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
















