என் இனிய தமிழ் மக்களே…என்ற காந்த குரலுக்கு சொந்தகாரரும், இயக்குநர் இமயம் என போற்றப்படும் பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தற்போது பார்க்கலாம்.
தேனி மாவட்டம், அல்லிநகரம் ஊராட்சியில் பெரியமாத்தேவர் – மீனாட்சியம்மாள் தம்பதிக்கு 1941ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி மகனாக பாரதிராஜா பிறந்தார். படிக்கும்போதே நடிக்கும் ஆர்வம் அவருக்கு வந்ததால் நாடகங்களுக்கு கதை எழுதிய பாரதிராஜா, உதவி இயக்குநராக திரைத்துறையில் நுழைந்தார்.
1977ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ’16 வயதினிலே’ படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருது பெற்ற பாரதிராஜா, ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் அவரே கதாநாயகனாக அறிமுகமானார்.
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா, கல்லுக்குள் ஈரம், மண்வாசனை உள்ளிட்ட காவியத் திரைப்படங்களையும் பாரதிராஜா இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவிற்கு ராதிகா, ராதா, ரேவதி, ரஞ்சிதா போன்ற காதநாயகிகளையும், கார்த்திக், நெப்போலியன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்தினார்.
இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக 2004ஆம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதைப் பெற்றார்.
பிலிம்பேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், நந்தி விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பாரதிராஜா பெற்றுள்ளார். சகோதரியின் மகள் சந்திர லீலா என்பவரை திருமணம் கொண்ட பாரதிராஜாவுக்கு மனோஜ் என்ற மகனும், ஜனனி என்ற மகளும் பிறந்தனர்.
தாஜ்மகால் படத்தில் அறிமுகமாகி 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மனோஜ் பாரதிராஜா கடந்தாண்டு மார்ச் 25ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். மகன் இறந்த சோகம் மற்றும் வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதிராஜா அதிகாலை உயிரிழந்தார்.
















