உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமானத்தின் முதல் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்திய விமானப்படையில் இணையும் இந்த விமானம் வரும் டிசம்பருக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நீண்டகாலமாகவே பொதுத்துறை நிறுவனங்களின் ஏகபோக கட்டுப்பாட்டில் மட்டுமே நாட்டின் உள்நாட்டு ராணுவ விமானத் தயாரிப்புத் துறை இருந்து வந்தது.
இதனை மாற்றி முதல்முறையாக இந்தியா இராணுவ விமானத்தைத் தயாரிக்கும் ஒப்பந்தம் தனியார் துறைக்கு வழங்கப் பட்டது. அது ‘C-295 இந்தியா’ திட்டமாகும்.
அதன் படி, ஐரோப்பிய Airbus Defence and Space நிறுவனத்துடன் இணைந்து Tata Advanced Systems நிறுவனம் உள்நாட்டிலேயே ஒரு ராணுவ விமானத்தை முழுமையாகத் தயாரித்துள்ளது.
இந்திய விமானப்படையின் பழமையான Avro-748 விமானங்களுக்கு மாற்றாக 56 ‘C-295’ ரக இராணுவப் போக்குவரத்து விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு இந்தியா முடிவெடுத்தது. 2021-ல் 21,935 கோடி இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் படி, முதல் 16 விமானங்கள் ஸ்பெயினிலிருந்து ‘பறக்கத் தயாரான’ நிலையில் இந்தியா கொள்முதல் செய்யும் என்றும், மீதமுள்ள 40 விமானங்கள் குஜராத்தில் உள்ள வதோதரா ஆலையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பல்வேறு பாதுகாப்புப் பணிகளுக்குப் பயன்படும் வகையில் தயாரிக்கப்படும் இந்த விமானம், 71 வீரர்கள், 48 பாராசூட் வீரர்களுடன் மருத்துவ அவசரத் தேவைக்கான 24 ஸ்ட்ரெச்சர்களைச் ஏற்றிச் செல்லும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறுகிய தூரத்தில் புறப்பட்டு தரையிறங்கும் (STOL) திறன் கொண்ட டர்போப்ராப் (turboprop) விமானமான இந்த ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமானம், தொலைதூர மற்றும் மலைப்பாங்கான எல்லைப் பகுதிகளிலும் கரடுமுரடான, சமமற்ற ஓடுதளங்களிலும் சிறப்பாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த புதன் கிழமை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமானம், குஜராத்தின் வதோதராவில் உள்ள டாடா-ஏர்பஸ் இறுதி அசெம்பிளி லைன் (FAL) மையத்திலிருந்து சோதனைக்காக வானில் பறந்தது.
விமான அமைப்புகளின் முக்கியமான செயல்முறைகளை மேற்கொண்ட இந்த விமானம்
தனது முதல் சோதனைப் பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
சுயசார்பு இந்தியாவின் வெற்றியாக கருதப்படும் இது இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் விமானத் தயாரிப்புத் திறன்களை வலுப்படுத்தியுள்ளது என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறனை வளர்ப்பதற்கான இந்திய விமானப்படையின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது என்றும் இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
உண்மையில் ஏர்பஸ் C-295-ன் சோதனை வெற்றி என்பது பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் ஒரு பெரிய முன்னேற்றமாகும்.
















