பல்வேறு துறைகளில் சாதித்த 65 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கெளரவித்தார்.
கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்தாண்டு 131 பேருக்கு விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதில் முதற்கட்டமாக கடந்த மாதம் 25-ம் தேதி 66 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 2ஆம் கட்டமாக 65 பேருக்கு விருது வழங்கும் விழா, டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி குடியரசுத் தலைவர் கெளரவித்தார்.
திரைத்திரையில் சாதித்த மலையாள நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷண் விருதும் நடிகர் மாதவனுக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு பத்ம ஸ்ரீ விருதையும், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜுக்கு பத்ம பூஷண் விருதையும் வழங்கி குடியரசுத் தலைவர் கெளரவித்தார்.
இதேபோல் புகழ்பெற்ற மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம், சிற்பக் கலைஞர் ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர், கர்நாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானந்தன், மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசன், பேராசிரியர் கே.ராமசாமி ஆகியோரும் குடியரசுத் தலைவர் கரங்களால் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.. இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
















