டாஸ்மாக் மற்றும் கட்சி நிதி குறித்த முதலமைச்சர் விஜயின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு, பின்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், தவெக அரசு ஒருபோதும் ஊழல் செய்யாது என்றும், டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் நடைபெற்றதாகக் கூறப்படும் வசூல்கள் அனைத்தும் தற்போது அரசின் கஜானாவுக்கு வரத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். கட்சி நிதி குறித்து முதலமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு தவெக உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், முதலமைச்சர் பேசுவதை உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், முதலமைச்சரின் உரை முடிந்தவுடன் எதிர்க்கட்சிக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்
இதனை அடுத்து பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது பின்பற்றிய நடைமுறையை தற்போது ஏன் பின்பற்றவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், திமுக-வின் முந்தைய நிலைப்பாட்டிற்கும், தற்போதைய செயல்பாட்டிற்கும் வேறுபாடு இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டத்தில் மரபு மற்றும் பாரம்பரியம் குறித்து திமுக-வினர் வகுப்பு எடுத்ததாக விமர்சித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பேசியபோது சட்டத்திற்கு எதிராக பல வார்த்தைகள் பேசப்பட்டதாக கூறிய அவர், அப்போது முதலமைச்சர் ஏன் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார். தற்போது முதலமைச்சர் பேசத் தொடங்கியதும் அவர்களே குறுக்கிடுவதாக குற்றம்சாட்டினார். மேலும், கட்சி நிதி என்றுதான் முதலமைச்சர் கூறியதாகவும், எந்த கட்சியைப் பற்றியும் அவர் குறிப்பிடவில்லை என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
இதனை அடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தாம் பேசியபோது சில அமைச்சர்கள் குறுக்கிட்டு பேச சபாநாயகர் அனுமதி வழங்கியதாக தெரிவித்தார். மேலும், கட்சி நிதி குறித்து பேசிய முதலமைச்சர் விஜய், தைரியம் இருந்தால் எந்த கட்சி என்று தெளிவாக தெரிவிக்க வேண்டும் என உதயநிதி சவால் விடுத்தார்
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், டாஸ்மாக் போலவே பல துறைகளிலும் கட்சி நிதி என்ற பெயரில் நடைபெற்றதாகக் கூறப்படும் வசூல்களை அரசின் கஜானாவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்தார். பேரவையில் சிலர் நடுங்கிப்போய் தவெகவினர் மீது அவதூறு பரப்புவதாகவும் கூறினார். மேலும், மக்களுக்கு அனைத்தும் தெரியும் என்றும், மக்கள் அனைத்தையும் தெளிவாக கவனித்து வருகின்றனர் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
இதனிடையே, முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
















