சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து ஜெட்டாவில் ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் பாதுகாப்பு, உளவுத்துறை பகிர்வு மற்றும் ராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய ‘இஸ்லாமிய நேட்டோ’ கூட்டணியாகக் கருதப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்தாண்டு பாகிஸ்தானும் சவூதி அரேபியாவும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனைத் தொடக்கமாக வைத்து சர்வதேச அளவில் ‘இஸ்லாமிய நேட்டோ’ என்று விவரிக்கப்படும் ஒரு புதிய வியூகக் கூட்டணி உருவாகிறது என்று கூறப்பட்டது.
இந்தப் பாதுகாப்புக் கூட்டணியில் மற்ற மேற்கு ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளையும் இணைப்பதில் பாகிஸ்தானும் சவூதி அரேபியாவும் ஆர்வம் காட்டி வருவதாக கடந்த பல மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.
அமெரிக்கா-ஈரான் போரால் வளைகுடா நாடுகளும் கடும் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளன. நாட்டின் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ள நிலையில் ஹார்முஸ் மற்றும் செங்கடல் வழியாக நடைபெறும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தும் சீர்குலைத்துள்ளது.
இதன் விளைவாக பாதிப்புக்குள்ளான வளைகுடா நாடுகள் தங்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியுள்ளன.
இதற்காக நேட்டோ கூட்டணி போல ஒரு இஸ்லாமிய கூட்டணி அமைப்பதற்கான முன்னேற்பாடுகளும் விவாதங்களும் நீண்ட காலமாகவே நடந்து வந்துள்ளது.
ஈரான் போர் தொடங்கியதில் இருந்து சவூதி அரேபியாவும் பாகிஸ்தானும் இஸ்லாமிய கூட்டணியை உருவாக்கும் செயல்முறையை விரைவுபடுத்தி வந்தன.
அரசுமுறை பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் அந்நாட்டுத் துணைப் பிரதமர் இஷாக் தார் பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஆகியோர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து இருநாடுகள் இடையேயான எதிர்கால பாதுகாப்பு உறவுகள் குறித்தும் விவாதித்துள்ளனர்.
ஏற்கெனவே செங்கடல் வழியாக சென்ற சவூதியின் கப்பலை ஹௌதிகள் தாக்கியதையடுத்து,சவூதியின் கடல்வழி பாதுகாப்புக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் முயற்சியெடுத்து வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா முன்னெடுத்துள்ள பாதுகாப்பு கூட்டணியில் துருக்கியும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கூட்டணிக்கான அனைத்து அடிப்படை விதிமுறைகளும் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு, பாகிஸ்தான், சவுதி மற்றும் துருக்கி தலைவர்களிடையே பரிமாறப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக துருக்கியின் மூத்த உளவுத்துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர்ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் ஜெட்டாவில் சந்தித்து மிக முக்கியமான மேற்கு ஆசியாவின் பாதுகாப்பு கட்டமைப்பை அடிப்படையிலேயே மாற்றியமைக்கக்கூடிய முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அதன்படி, சவூதி அரேபியா நிதி உதவி வழங்கும் என்றும், பாகிஸ்தான் தனது அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திறன் மற்றும் மனிதவளத்தை வழங்கும் என்றும், ராணுவ வல்லமை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தைத் துருக்கி வழங்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே சவூதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், கவசப் படை, பீரங்கிப் படை, காலாட்படை மற்றும் ஏவுகணைப் பிரிவுகள், அத்துடன் இரண்டு விமானப்படைப் படைப்பிரிவுகள் மற்றும் இரண்டு கடற்படைத் தொகுதிகள் ஆகியவற்றின் ஆதரவுடன் சுமார் 25,000 வீரர்களை சவுதி அரேபியாவில் நிலைநிறுத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.
தனது சொந்த நலன்களுக்கும் இஸ்ரேலின் நலன்களுக்கும் மட்டுமே அமெரிக்கா முன்னுரிமை அளித்து வரும் நிலையில் சர்வதேச பாதுகாப்பு வியூகத்தை இந்த மூன்று நாடுகளும் உருவாக்கியுள்ளன.
















