அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில், உலகம் முழுவதும் சுமார் 30 தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை இழுத்து மூட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரானதுமே அரசு செலவீனங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்தார்.
தொடர்ந்து, கடந்த ஆண்டு, 10க்கும் மேற்பட்ட தூதரக அலுவலகங்களை மூடியும், நூற்றுக்கணக்கான தூதரக அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்தும் கடுமையான நடவடிக்கைகளை ட்ரம்ப் நிர்வாகம் எடுத்திருந்தது. கூடுதலாக 17 துணைத் தூதரகங்கள் மற்றும் மூன்று பிற ராஜதந்திர அலுவலகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக கனடாவின் வின்னிபெக் (Winnipeg) நகரில் உள்ள துணைத் தூதரகம், ஜப்பானின் நகோயா (Nagoya) நகரில் உள்ள துணைத் தூதரகம், இந்தோனேசியாவின் மேடான் (Medan) நகரில் உள்ள துணைத் தூதரகம், கிரெனடாவின் செயின்ட் ஜார்ஜஸ் (St. George’s) நகரில் உள்ள அமெரிக்க தூதரக மற்றும் கேமரூன் நாட்டின் துவாலா (Douala) நகரில் உள்ள தூதரகம்ஆகியவற்றை மூட முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் இஸ்லாமிய ஜிகாதி பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அமெரிக்காவின் இந்த முடிவு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் சீனா தனது இராஜதந்திர இருப்பை விரிவுபடுத்தி வரும் வேளையில், தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை மூடுவது மற்றும் செயலிழக்கச் செய்வது, ‘யுஎஸ் எய்ட்’ (US Aid) போன்ற திட்டங்களை ரத்து செய்வது மற்றும் நூற்றுக்கணக்கான தூதரக அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்வது ஆகியவற்றின் மூலம் அதிபர் ட்ரம்ப், சர்வதேச அளவில் அமெரிக்காவின் இருப்பைக் குறைத்து வருகிறார்.
பட்ஜெட் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் அதிபர் ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் ஏற்படும் வெற்றிடத்தை சீனா நிரப்பும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவின் 271 தூதரக அலுவலகங்களுக்கு எதிராகச் சீனா உலகம் முழுவதும் 274 தூதரகங்களைச் செயல்படுத்திவருகிறது.
ஏற்கெனவே இந்திய -பசிபிக் மற்றும் மேற்கு ஆசியா போன்ற முக்கியமானபகுதிகளில் சீனா தனது செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் அதிகரித்து வருகிறது.
அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை விட்டுக்கொடுத்து வருவதால், சீனாவின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற முக்கியமான களங்களிலிருந்து அமெரிக்கா வெளியேறினால், அந்தப் பகுதிகள் சீனாவின் ஆதிக்கத்துக்குள் செல்லும் என்றும் கூறப்படுகிறது.
சொல்லப்போனால் ஒரே நேரத்தில் பல இடங்களில் மேற்கொள்ளப்படும் இச்செயல்பாடு இதற்கு முன்பு அமெரிக்காவால் முன்னெடுக்கப்படாத ஒன்றாகும். உலகில் தற்போது நடந்துவரும் எந்தவொரு நிகழ்வும் இதற்குக் காரணமில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்திருந்த போதிலும் அதிபர் ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
















